அயோத்தி தீர்ப்பும் அகன்ற கறையும்
1 Oct 2010
”ராமர் அங்கேதான் பிறந்தாரா? அங்கே கோவில் கட்டலைன்னா இப்ப என்ன? ஆதாரம் இருக்கா அங்கேதான் ராமர் பிறந்தாருன்னுட்டு?” - கேள்விகள், கேள்விகள்.
”இந்த தீர்ப்பு இப்ப வரலைன்னு யாரு அழுதா? இந்த இளையதலைமுறைக்கு ராமர்னாலே யாருன்னு தெரியாது. அதை பத்தியெல்லாம் யாரும் கவலைப்படலை.” இப்படியும் கமெண்ட்கள்.
இந்திய ஜன்நாயகத்தின் மாபெரும் கறையான முடிசூடா இளவரசன் ராகுல் வின்சி என்கிற ராகுல் காந்தி “அயோத்தியை விட முக்கிய விஷயங்கள் இருக்கின்றன” என்று சொல்ல பத்திரிகைகள் அதை அப்படியே பக்கங்களில் பிரதானமாக வாந்தியெடுத்தன. (கல்மாடி சுருட்டினதில் வாங்க வேண்டிய கப்பமா? குடும்ப நண்பர் குவிட்ரோச்சி கொடுக்க வேண்டிய கமிஷனா? – எது அயோத்தியை விட முக்கியம் என யாரும் கேட்கவில்லை.)
ஆனால் தீர்ப்பின் நேரம் நெருங்க நெருங்க நாடெங்கும் மக்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டு கவனித்தார்கள். மூன்றரை மணி – நான்கு – நான்கு இருபது- தீர்ப்பு வர ஆரம்பித்தது. சந்தித்த அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது. போன்கால்கள் எஸ்.எம்.எஸ்கள் எதிர்பாராதவர்களிடமிருந்தெல்லாம் வர ஆரம்பித்தது!
தீர்ப்பு தெளிவாக இருந்தது.
அது ராமர் கோவில்தான். அந்த இடம் ராமருக்குத்தான் சொந்தம். அந்த இடமே தெய்வத் தன்மை உடையதாகவும் (ஹிந்தியில் “தேவ-துல்ய”) வழிபாட்டுக்குரியதாகவும் ஹிந்துக்களுக்கு இருந்திருக்கிறது. பாபர் அங்கு அந்த சர்ச்சைக்குரிய கட்டிடத்தை கட்டுவதற்கு முன்னால் அங்கே ஒரு கோவில் அமைப்பு இருந்தது. அதை அவன் இடித்தானா இல்லையா என்பது கேள்விக்குரியது. ஆனால் அதன் இடிபாடுகளின் மீது அவனுக்கு சொந்தமில்லாத இடத்தில் அவன் கட்டியதுதான் அந்த கட்டிடம். எனவே அது ”ராம் லல்லா” என்கிற குழந்தை ராமருக்கு சொந்தமானது.
தீர்ப்பு தெளிவாகத்தான் இருந்தது. ஆங்கில, ஹிந்தி தொலைக்காட்சி சேனல்களில் அப்படியே சொல்லவும் செய்தார்கள். ஆனால் தமிழ் தொலைக்காட்சி சானல்களில் ராமர் என்கிற வார்த்தை வராமல் பார்த்துக் கொண்ட விதம், அந்த தீர்ப்பை முடிந்தவரை முஸ்லீம்களுக்கு சாதகமாக வந்தது போல சொன்ன விதம் இருக்கிறதே, மகா சிறுபிள்ளைத்தனமாகவும், நகைப்புக்குரியதாகவும் இருந்தது!
மூன்று நீதிபதிகளுமே கும்மட்டம் இருந்த மையப்பகுதி, ஸ்ரீராம ஜென்ம பூமியின் இதயப்பகுதி ஹிந்துக்களுக்கு உரியது என தெளிவாகவே சொல்லியிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, சர்ச்சைக்குரிய கட்டிடத்திற்கு முன்புறம் உள்ள ராம் சபூத்ரா மற்றும் சீதா கீ ரசோயீ ஆகிய வழிபாட்டு மேடைகள் உள்ள இடம் நிர்மோஹி அகாராவுக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள். நிர்மோஹி அகாரா என்ற மடம் 1885 இலேயே ராமஜன்மபூமி விஷயமாக நீதி மன்றத்தை அணுகியவர்கள். அன்றைய பிரிட்டிஷ் அரசு ஹிந்துக்களுக்கு எதிராக நடந்தது. சுதந்திர பாரதத்தின் நீதித்துறை அந்த களங்கத்தைத் துடைத்திருக்கிறது.
நீதிபதி கானின் தீர்ப்பில் இந்த சர்ச்சைக்குரிய பகுதி இப்படி பங்கு போடப்படவேண்டுமென கூறுகிறது:
மைய கும்மட்டத்துக்கு கீழே ராம்லாலா விக்கிரகங்கள் வைத்துள்ள தற்காலிக கோவில் அமைந்துள்ள பகுதி ஹிந்துக்களுக்கே இறுதியாக அளிக்கப்பட வேண்டும் என மேலும் அறிவுறுத்தப்படுகிறது. நிர்மோஹி அகாராவுக்கு ராம் சபுத்ரா பகுதியும் சீதா ரஸோயி பகுதியும் அளிக்கப்பட வேண்டும் என நெறியுறுத்தப்படுகிறது.
நீதிபதி சுகிர் அகர்வால் தனது தீர்ப்பில் கூறியிருப்பது:
மூன்று கும்மட்டங்கள் இருந்த இடத்திற்குக் கீழாக உள்ள பகுதி பகவான் ராம ஜென்மஸ்தான தெய்வம் என்றும் ஸ்ரீ ராமர் பிறந்த இடமாகவும் ஹிந்து மத நம்பிக்கை கருதுவதால் அது ஹிந்துக்களுக்கு உரியதாகும். வழக்கு தொடுத்தவர்கள் (அதாவது முஸ்லீம்கள்) அதற்கு எந்த இடையூறும் எவ்விதத்திலும் செய்யக் கூடாது.
நீதிபதி தரம் வீர் ஷர்மா தனது தீர்ப்பு சுருக்கத்தில் முன்னுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கையில் கூறியிருப்பது:
1. சர்ச்சைக்குரிய இடம்தான் ராமர் பிறந்த இடமா?
சர்ச்சைக்குரிய இடம்தான் ராமர் பிறந்த இடம். அந்த இடமே சட்டரீதியில் ஒரு ஆளுமையாகவும் தெய்வமாகவும் கருதப்பட வேண்டும். ஏனெனில் அது பகவான் ராமர் குழந்தையாக பிறந்த இடமாக இறைத்தன்மையை வெளிப்படுத்துகிறது.
2. சர்ச்சைக்குரிய கட்டிடம் மசூதியா? அது எப்போது கட்டப்பட்டது? யாரால் கட்டப்பட்டது?
சர்ச்சைக்குரிய கட்டிடம் பாபரால் கட்டப்பட்டது. அது கட்டப்பட்ட ஆண்டு சரியாக தெரியவில்லை. அது இஸ்லாமிய மதநெறிகளுக்கு மாறாக கட்டப்பட்டது. எனவே அது ஒரு மசூதியாக கருதப்பட முடியாது.
3. அங்கு மசூதி ஹிந்து கோவிலை இடித்த பிறகு கட்டப்பட்டதா?
அங்கு ஏற்கனவே இருந்த ஒரு பழமையான கட்டிடத்தை இடித்துவிட்டு அந்த சர்ச்சைக்குரிய கட்டிடம் கட்டப் பட்ட்து. இந்திய அகழ்வாராய்ச்சி கழகம் அந்த இடிக்கப்பட்ட கட்டிடம் ஒரு பிரம்மாண்டமான ஹிந்து மத வழிபாட்டுக் கட்டிடம் என்பதை ஆதாரபூர்வமாக நிறுவியுள்ளது.
************
இதே விஷயங்களைத்தான் ஹிந்துத்துவ வாதிகளும், அயோத்தி இயக்கத்தை முன்னெடுத்து நடத்தியவர்களும் இத்தனை ஆண்டுகளாக கூறிவந்துள்ளார்கள். ஆனால் ஊடகங்களும், இடதுசாரி அறிவுஜீவிகளும் ஏதோ பிரம்மாண்டமான தினசரி தொழுகை நடத்தி வரப்பட்ட மசூதியை ஹிந்துத்துவர்கள் இடித்துவிட்டதாக பிரச்சாரம் செய்தார்கள். அதன் விளைவாகவே இந்தியா முழுக்க கலவரங்கள் உருவாகின. தங்களை மதச்சார்பின்மையின் நாயகன்களாகவும் சிறுபான்மையினரின் காவலன்களாகவும் தங்களைக் காட்டிக்கொள்ள இந்த அறிவுஜீவிகள் அப்பாவிகளின் இரத்த ஆற்றில் மூழ்கி முக்குளிக்கவும் தயங்கவில்லை.
ஆனால் இது ஒரு நிலத் தகராறு பிரசினையோ அல்லது மத வழிபாட்டுத்தலம் குறித்த இரு சாராரின் பிரச்சனையோ மட்டும் அல்ல. தேசம் குறித்த இரு அடிப்படையான பார்வைகள் இங்கே மோதியுள்ளன.
இந்த தேசத்துக்கென்று ஒரு பண்பாட்டு வளமை உள்ளது. அதுவே இந்த தேசத்தை ஒன்றுபடுத்துகிறது. அதன் அடிப்படையிலேயே நாம் நம் மக்களை ஒருங்கிணைக்க வேண்டும். குறுகிய சுயநல அரசியல் இலாபங்களுக்காக அந்தப் பண்பாட்டு மதிப்பீடுகளை நாம் பலி கொடுத்துவிடக்கூடாது என்பது ஒரு பார்வை.
மாறாக நமக்கென்று ஒரு பண்பாடு கிடையாது. ஒரு சமுதாயத்தை தாஜா செய்து, ஒவ்வொரு சமுதாயத்தையும் மோதவிட்டு அரசியல் நட்த்துவதே சாலச்சிறந்தது என்கிற மற்றொரு பார்வை. அன்னியர்களையும் அரசியல் இலாபமிருந்தால் தேசிய நாயகர்களாக்கும் வக்கிரம் கொண்ட அந்த பார்வை மதச்சார்பின்மை என்கிற பெயரில் இந்த நாட்டில் கோலோச்சியது. இந்த தேசத்தின் வரலாற்றை வெறுமனே அதிகாரத்தையும் பொருளாதார உறவுகளையும் மட்டுமே கொண்டு கட்டுடைக்கும் பார்வை அது.
அதே நேரத்தில், தேசிய அளவில் கருத்துரீதியாக வெற்றிடத்தை உருவாக்கி, அங்கு அன்னிய தேச கருத்தாங்கங்கள விதைத்து, ஆன்ம அறுவடைக்கென களம் இறங்கியிருந்த ஆக்கிரமிப்பு மத சக்திகள்.
வாக்கு வங்கிகளுக்காக மக்களை பிளக்கும் போலி மதச்சார்பின்மையும், வலுவற்ற வக்கிர அரசியலை பயன்படுத்தி விரிவாதிக்க ஆன்ம அறுவடை செய்யும் சக்திகளும் கை கோர்த்த்தன் சின்னமாக மாறியது பாப்ரி கும்மட்டம். சோவியத் உடைந்த காலகட்டம் அது. வளமையான புரவலனை இழந்த இந்திய இடதுசாரி அறிவுஜீவிகளுக்கும் வகாபிய இஸ்லாமிய சக்திகள் கை கொடுக்க முன்வந்தன.
அதன் விளைவாக மவுண்ட் ரோடு மாவோ பத்திரிகை உள்ளிட்ட எல்லா இந்திய இட்துசாரி அறிவுஜீவிகளும் இஸ்லாமிய நேசர்களானார்கள். பொதுவாகவே மார்க்சிய சித்தாந்திகளுக்கு வகாபிய இஸ்லாமிய கருத்தியல் சாய்வு உண்டு. அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் கூட, இஸ்லாமிய சக்திகளை எங்கும் தாக்கும் போது தங்களை இஸ்லாமிய எதிர்ப்பாளர் அல்ல எனக் காட்ட இந்தியாவில் ஹிந்துத்துவத்தை தாக்குவது ஒரு அருமையான ப்ப்ளிக் ரிலேஷன் தந்திரம். (1990களின் தொடக்கத்தில் தான் முதலாம் புஷ் ஈராக்கின் மீது தாக்குதலை ஆரம்பித்திருந்தார் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.) எனவே அமெரிக்க பல்கலைக்கழகங்களின் இந்திய நோக்கர்கள் உட்பட இந்திய இட்துசாரிகளின் இஸ்லாமிய நேசபாவத்தை முழு மனதுடன் ஆதரித்தனர். உலக அரங்கில் ஹிந்துத்துவர்கள் சர்வதேச வில்லர்களாக்கப் பட்டனர்.
1992 டிசம்பர்-6 வலதுசாரி-இடதுசாரி வேறுபாடில்லாமல் கறுப்பு ஞாயிறாக சித்தரிக்கப்பட்டது. சோ துக்ளக்குக்கு கறுப்புச் சட்டை போட்டார். இல்லாத மசூதிக்கு பொல்லாத ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஏதோ பெரிய அநியாயம் செய்யப்பட்டு விட்டதாக ஒவ்வொரு டிசம்பர்-6ம் தேதியும் அவர்களுக்கு போதிக்கப் பட்டது. இந்த 18 வருட பொய் பிரச்சாரத்தைத் தான் அக்குவேறு ஆணி வேறாக இந்த தீர்ப்பு உடைத்து எறிந்திருக்கிறது.
************
சரி, உண்மையைத் தீர விசாரிப்போம் என்று அரசே ஆணையிட்டு 2003-இல் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட போது தான் எத்தனை எதிர்ப்புக்கள்! எத்தனை போலித்தனமான ஊடக விளையாட்டுக்கள்! ஒன்றை மட்டும் பார்க்கலாம். அவுட்லுக் பத்திரிகையின் எழுத்தாளர் சந்தீபன் தேப் அயோத்தி அகழ்வாராய்ச்சி நடக்கும் இடத்துக்குச் சென்று அங்கு நடக்கும் அகழ்வாராய்ச்சி கண்டுபிடித்த விஷயங்களை கட்டுரையாக எழுதினார். அங்கு பல சுதை சிற்பங்கள், பழைய தேவநாகரி லிபியில் எழுதப்பட்ட ஒரு கல்வெட்டு ஆகியவை கிடைத்திருப்பதை அவர் எழுதினார். இதற்கு இர்பான் ஹபீப் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனத்தின் இடைக்கால அறிக்கைகளில் பாப்ரி அமைப்பின் கீழே எவ்வித பிறிதொரு அமைப்பும் இருந்ததற்கான ஆதாரமும் இல்லை என சொல்லி வந்தார்கள். சந்தீபன் தேப் இந்த கேள்விகளுக்கெல்லாம் எழுதிய பதிலில் குறிப்பிட்டார்:
”இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனம் சமர்ப்பித்த புதிய (அதாவது இடைக்கால) அறிக்கை குறித்து எழுதிய பெரும்பாலான நாளேடுகள் பாப்ரி மசூதியின் கீழ் எவ்வித அமைப்பும் இல்லை என்று எழுதினாலும், உண்மையில் அந்த அறிக்கை என்ன சொல்கிறதென்றால், 30 அகழ்வாராய்ச்சிக்கான குழிகள் தோண்டப்பட்டதில் மனிதர்கள் உருவாக்கிய அமைப்புகள் 8 குழிகளில் கிட்டியுள்ளன. 16 குழிகளில் எதுவும் கிடைக்கவில்லை, 5 குழிகளில் மேலே இருக்கும் அமைப்பால் முடிவு செய்ய முடியவில்லை. ஒரு குழி இன்னும் தோண்டவில்லை. கண்டுபிடித்த விஷயங்களாக ஆவணம் சொல்லியிருப்பவை: கிழக்கு மேற்காகவும் வடக்கு தெற்காகவும் அமைக்கப்ப்ட்ட செங்கல் சுவர்களுக்கான ஆதாரம், அலங்காரத்துடனான வண்ணத் தரைகள், பல தூண்களின் அடித்தளங்கள், நான்கு பக்கங்களிலும் யக்க்ஷர்கள் கொண்ட 1.64 அடி நீளமுள்ள கருங்கல் தூண்” (அவுட்லுக், ஜூன் 23, 2003)
ஆனால், இர்பான் ஹபீப்பும், மற்ற பிரபல நாளேடுகளும் கோவிலுக்கான எவ்வித ஆதாரமும் இல்லை என கூசாமல் சொல்ல தயங்கவில்லை. இந்த ஏமாற்று வேலை தீர்ப்பு வருவதற்கு சில நாட்கள் முன்னால் கூட நடத்தப் பட்டது. சி.என்.என். ஐ.பி.என் டிவியில் “அயோத்தி தீர்ப்பு வரலாற்று ஆதாரத்தை அடிப்படையாக கொண்டிருக்கும்” (Ayodhya dispute hinges on historical evidence) என்கிற தலைப்பில் ஒரு செய்தி துணுக்கு. அதில் அகழ்வாராய்ச்சி அறிக்கை குறித்து ஒரு ஆராய்ச்சியாளர் பேசுகிறார். பின்னர் அந்த அறிக்கை தவறு என்று இஸ்லாமியர் ஒருவரும் பின்னர் தமோதர் ஜா என்கிற மார்க்சியரும் (இவரை சர்வதேச புகழ் மிக்க வரலாற்று அறிஞர் என நிகழ்ச்சியில் சொல்கிறார்கள்) இந்திய அகழ்வாராய்ச்சி கழகம் கண்டுபிடித்தது மசூதியைத் தான் என்று சொல்கிறார்கள். பிறகு செய்தி தொகுப்பாளர் “வரலாற்று அறிஞர்கள் ஒருபக்கம் இப்படி சொல்கிறார்கள்; ஹிந்து தரப்போ இதை மறுக்கிறது” என்கிறார்! ஏதோ ஹிந்துக்கள் வரலாற்று ஆசிரியர்களுக்கு எதிர் என்றும், இஸ்லாமியர்களே வரலாற்று ஆதாரப்படி நடப்பதாகவும் ஒரு ஊடக பிரமையை வலிந்து உருவாக்குகிறார்கள்!
இத்தகைய ஊடக மோசடிகளையும் அயோத்தி தீர்ப்பு தகர்த்து எறிந்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு போலி அறிவுஜீவிகளும், விலைக்குப் போன ஊடகங்களும் உருவாக்கிப் பரப்பிய பொய்களை அம்பலப் படுத்தி, ஹிந்துக்கள் ஈடுபட்டது நியாயமான ஒரு போராட்டத்தில் தான் என்பதையும் தெளிவு படுத்தியிருக்கிறது. அந்த வகையிலும் இத்தீர்ப்பு முக்கியமானதாகிறது.
அயோத்தியில் அடிமை சின்னமான பாப்ரி கும்மட்டத்தை நீக்கும் அறப்போரில் கரசேவகர்கள் மௌலானா முலாயம் சிங்கின் குண்டடிகளை தங்கள் நெஞ்சில் சுமந்து பலிதானிகள் ஆனார்கள். ஆனால் அந்தத் தியாகிகளுக்கு மதவெறியர்கள் என்றும் மசூதியை இடித்தவர்கள் என்றும் பழி சுமத்தப் பட்டது. இன்று, அவர்கள் மத வெறியர்கள் அல்ல; தாய் நாட்டின் அவமானத்தைத் துடைத்த தேசபக்தர்கள் என்பது இந்த தீர்ப்பின் மூலம் நிலைநாட்டப் பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு அவர்கள் தியாகத்தினால் நமக்குக் கிடைத்திருக்கும் பிரசாதம். அதனால் நாம் மேலும் உத்வேகம் பெறுவோம். அனைத்து இந்திய மக்களையும், குறிப்பாக இஸ்லாமிய சகோதரர்களையும் உண்மையை உணரச் செய்து, அயோத்தியில் ஸ்ரீ ராமனுக்கு மகோன்னதமான ஒரு ஆலயத்தை, அன்பினால் சமரசத் தன்மையால் அமைப்போம்.





நானும் தீர்ப்பை ஏற்கிறேன்.
ReplyDelete